புதன், 8 டிசம்பர், 2010

வரும் சட்டமன்ற தேர்தல் கூட்டணி: தேர்தல் நேரத்தில் ராஜதந்திரத்தை கையாளுவேன்; விஜயகாந்த் பேட்டி

விருத்தாசலம்:  
             கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க. தலைவரும், விருத்தாசலம் சட்டமன்ற உறுப்பினருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் சிதம்பரம் பகுதியில் பார்வையிட்டார். இதனை தொடர்ந்து நேற்று காலை விஜயகாந்த் எம்.எல்.ஏ. விருத்தாசலத்திற்கு வந்திருந்தார். அங்கு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அரிசி, வேட்டி, சேலை ஆகிய நிவாரண உதவிகளை வழங்கினார்.
 
பின்னர் விஜயகாந்த்  கூறியது:-
 
              மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க தேசிய பேரிடர் என அறிவித்து உடனுக்குடன் நிவாரணங்களை வழங்க அரசு நடவடிக்கை வேண்டும். கடலூர் மாவட்டத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. குறிப்பாக எனது தொகுதியிலும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இது குறித்து சட்டசபையில் பேசினால் நடவடிக்கை எடுப்பார்களா? இதனால் தான் என்னால் முடித்த உதவிகளை என் தொகுதிக்கு செய்து வருகிறேன்.
                    
                        சென்னையில் கொசு தொல்லை அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் மழைநீர் சூழ்ந்து உள்ளது. அங்கு வசிக்கும் மக்கள் மிகவும் சிரமமடைந்து வருகிறார்கள். விவசாயிகளுக்கு மின்சாரம் இல்லை. மக்களுக்கு பொது சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் இல்லை. எனவே மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த தி.மு.க. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 
                   ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து மத்திய அரசு தீர விசாரணை நடத்த வேண்டும் என மக்கள் கேள்விகளை எழுப்பியுள்ளனர். ஆனால், இது குறித்து ஏன் விசாரணை நடத்தவில்லை என புரியவில்லை. ஊழல் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி நடவடிக்கைகள் எடுத்தால் தான் குற்றங்கள் குறையும். இவ்வாறு அவர் கூறினார்.
 
பின்னர் கேட்ட கேள்விக்கு விஜயகாந்த் அளித்த பதில் வருமாறு:-
 
கேள்வி - வரும் சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகிறீர்களா?
 
பதில்- அது ரகசியம்.
 
கேள்வி- வரும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணியா?
 
பதில் - வரும் தேர்தலில் தி.மு.க. ஆட்சிக்கு வராமல் இருக்க அனைத்து ராஜதந்திரங்களையும் தேர்தல் நேரத்தில் கையாளுவேன்
 
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP