வியாழன், 7 அக்டோபர், 2010

தொகுதி மாறுகிறார் அமைச்சர் தமிழரசி? பரமக்குடி மீது பாசம்காட்டும் பின்னணி



சமீபத்தில் பரமக்குடியில் நடந்த இமானுவேல் சேகரனின் குருபூஜை விழாவுக்கு தி.மு.க. சார்பில் அஞ்சலி செலுத்த வந்தார் அமைச்சர் சுப.தங்கவேலன். அப்போது அவர், ‘‘ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசி நிச்சயமாக இன்று மாலைக்குள் இங்கே வந்து அஞ்சலி செலுத்திச் செல்வார்’’ என அழுத்தம் கொடுத்து உச்சரித்தார். அப்போதுதான் அமைச்சரின் ‘அழுத்தத்திற்கான’ காரணத்தை உடன்பிறப்புக்களால் கண்டுபிடிக்க முடிந்தது.

அதாவது கடந்த தேர்தலில் சமயநல்லூர் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சரான தமிழரசி, இப்போது பரமக்குடி தொகுதியை குறி வைக்கிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் பரமக்குடி தொகுதியில் தமிழரசி போட்டியிடக்கூடும் என்று நம்மிடம் கூறிய உடன்பிறப்புகள், தமிழரசியின் தொகுதி மாற்றத்துக்கான காரணங்களையும் பட்டியலிட ஆரம்பித்தார்கள்.

‘‘அழகிரியின் ஆசீர்வாதத்தால் அமைச்சர் ஆன தமிழரசிக்கு பூர்வீகம் பரமக்குடி அருகே உள்ள வெள்ளா கிராமம் ஆகும். அமைச்சர் ஆனதுமே பிறந்த மண்ணுக்கு எதையாவது செய்தாக வேண்டும் என விரும்பிய தமிழரசி, தனது பிறந்த ஊரான வெள்ளா கிராமத்தில், தனது தந்தையார் நினைவாக சமுதாயக்கூடம் ஒன்றை கட்டிக் கொடுத்தார். அதுமட்டுமின்றி, இமானுவேல் குருபூஜை சமயத்தில் தலித் இளைஞர்கள் தொடர் ஓட்ட ஜோதி கொண்டு வருவதற்காக டீ சர்ட்டுகள், பனியன்கள் மற்றும் பலவற்றை தனது சொந்த செலவில் வாங்கிக் கொடுத்தார்.

பரமக்குடி தொகுதியில் நடைபெறும் கல்யாணம், காதுகுத்து, சடங்கு, துக்க வீடுகளுக்கெல்லாம், தமிழரசி எங்கே இருந்தாலும் கண்டிப்பாக ஆஜராகிவிடுவார். இப்பழக்கத்தை ஆறு மாத காலமாகவே தவறாது கடைபிடித்து வந்தார்.

சமீபத்தில் பரமக்குடி அருகே கேளா என்ற கிராமத்தில், மரத்தின்மேல் அரசு பஸ் ஒன்று மோதிவிட்டது. இதில் பள்ளி மாணவ, மாணவிகள், வயதானவர்கள் என காயமடைந்தவர்கள் எல்லாம் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

இச்சம்பவம் பற்றி கேள்விப்பட்ட உடனேயே, மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு வந்த தமிழரசி, காயமடைந்த அனைவருக்கும் ஹார்லிக்ஸ், பழம், பால், பிஸ்கட் எல்லாம் கொடுத்து ஆறுதல் கூறிவிட்டு, படுகாயமடைந்தவர்களை எல்லாம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் தனது சொந்த செலவில் சேர்த்து சிகிச்சையளிக்கவும் ஏற்பாடு செய்தார்.

தமிழரசியின் இந்த பரமக்குடி பாசத்துக்கு காரணம், சமயநல்லூர் ரிசர்வ் தொகுதி தற்போது தொகுதி மறு சீரமைப்பில் பொது தொகுதியாக மாறிவிட்டது என்பதுதான். பரமக்குடி தனித்தொகுதி என்பதும், அத்தொகுதி தான் பிறந்த ஊர் என்பதும் அவருக்கு கூடுதல் மகிழ்ச்சியாகிவிட்டது. தனது தொகுதி மாறுதல் குறித்து அழகிரியின் குடும்பத்தினரிடையேயும் தமிழரசி அவ்வப்போது விவாதித்து வருகிறார்’’ என்றும் சொல்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புக்கள்.

சரி, பரமக்குடி தொகுதியில் தற்போது எம்.எல்.ஏ.வாக இருப்பது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராம்பிரபு. காங்கிரஸார் எப்படி தங்களது ‘கை இருப்பில்’ உள்ள தொகுதியை தி.மு.க.வுக்கு விட்டுக் கொடுப்பார்கள் எனக் கேட்டபோது, இதற்கான பதிலை கதர் கட்சியினர் நம்மிடம் விவரித்தார்கள்.

‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, திருவாடானை தொகுதிகள் காங்கிரஸ் வசமும், முதுகுளத்தூர், கடலாடி தொகுதிகள் தி.மு.க.விடமும் உள்ளன. தொகுதி சீரமைப்பில் கடலாடி தொகுதி இல்லாமல் போய்விட்டது. எனவே முதுகுளத்தூரை தி.மு.க. தரப்பு காங்கிரசுக்கு ஒதுக்கி கொடுத்துவிட்டு, தமிழரசிக்காக பரமக்குடியை கேட்டுப் பெற்று கொள்வார்கள். தென்மண்டலத்தை பொறுத்தவரை அண்ணன் அழகிரி ஆசைப்பட்டு கேட்கும் தொகுதியை காங்கிரஸார் தராமலா போய்விடுவார்கள்?’’ என்றார்கள் அந்த கதர் கோஷ்டிகள்.

தமிழரசியின் பரமக்குடி வருகையை அ.தி.மு.க. தரப்பும் ஸ்மெல் செய்து, உடனடியாக உஷாராகிவிட்டது.

தமிழரசியின் பலமான பிரசாரம் மற்றும் பண பலத்திற்கு முன்பு, காமா சோமா வேட்பாளர் நிறுத்தப்பட்டால் தமிழரசி எளிதில் வென்றுவிடுவார் என்று உள்ளூர் அ.தி.மு.க.வினர் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். ‘‘தமிழரசியின் போட்டியை எதிர்கொள்ள வேண்டும் என்றால், சிட்டிங் எம்.எல்.ஏ.வான ராம்பிரபுவின் சகோதரி கணவரான டாக்டர் முத்தையா மாதிரி பலமான ஒருவரை களம் இறக்கினால், இம்முறை பரமகுடியில் எங்கள் கொடிதான்’’ என்று உற்சாகப்படுகிறார்கள் அ.தி.மு.க.வினர்.

‘‘தொகுதி பறிபோன அதிருப்தியில் ராம்பிரபு தனது மச்சானுக்காக வரிந்து கட்டுவார். இதன்மூலம் காங்கிரசுக்குள் கலகத்தை ஏற்படுத்தியது மாதிரியும் இருக்கும். தமிழரசியை வீழ்த்தியது மாதிரியும் இருக்கும் என ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கலாம்’’ என்று மனக்கோட்டையில் துடிக்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தமிழரசியிடமே அவரது பரமக்குடி பாசம் குறித்தும், தொகுதி மாறும் முயற்சி பற்றியும் கேட்டோம்.

‘‘உங்க வாய் முகூர்த்தம் பலித்து, எனக்கு பரமக்குடி கிடைச்சா ரொம்ப சந்தோஷம்தான். சொந்த ஊர் என்பதால், அங்கு நடக்கும் நல்லது, கெட்டது என்று எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சென்று வருகிறேன். ‘அங்கே நில்’ என்று தலைவர் உத்தரவிட்டால், நின்றுதானே ஆக வேண்டும்?’’ என்று மகிழ்ச்சி பொங்கத் தெரிவித்தார் தமிழரசி.

பரமக்குடி இப்போதே ‘பரபரப்புக்குடி’ ஆகிவிட்டது!


0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP