யாருடன் கூட்டணி? கொ.மு.க. நிர்வாகிகள் பேட்டி
சென்னை:
பெரும்பாலான பொதுக் குழு உறுப்பினர்களின் விருப்பத்துக்கு ஏற்ப சட்ட பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து முடிவு செய்யப்படும் என கொங்குநாடு முன்னேற்றக் கழக நிர்வாகிகள் தெரிவித்தனர். கொங்குநாடு முன்னேற்றக் கழகத்தின் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் வியாழக்கிழமை நடந்தது.
அதன் பின்னர், கட்சித் தலைவர் பெஸ்ட் ராமசாமி, பொதுச் செயலாளர் ஈஸ்வரன் ஆகியோர் கூறியதாவது:
பொதுக்குழுவில் 5 சதவீத உறுப்பினர்கள் மட்டுமே பேசியுள்ளனர். மீதமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை எழுதிக் கொடுத்துள்ளனர். அதை படித்துப் பார்த்து பெரும்பாலானவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். தி.மு.க., அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமையாவிட்டால் மற்ற சிறிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தனி அணியாக போட்டியிடவும் தயங்க மாட்டோம். ஆனால், ஒருபோதும் பேரம் பேசும் கட்சியாக இருக்க மாட்டோம். காங்கிரஸ் தலைமையில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியக் கூறுகள் ஏற்பட்டுள்ளன. இதுவரை எந்தக் கட்சியிடமும் கூட்டணி குறித்து பேசவில்லை. அதற்கு இன்னமும் காலம் இருக்கிறது.
கள் இறக்க அனுமதிக்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.2,500 வழங்க வேண்டும். பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும். தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் விவசாயத்தையும் சேர்க்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மக்களிடம் பிரசாரம் செய்வோம். கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி, நாமக்கல், கரூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், பொள்ளாச்சி ஆகிய 12 மக்களவைத் தொகுதிகளில் எங்கள் கட்சி வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது என்றார் ஈஸ்வரன்.
1 கருத்துகள்:
தி.மு.க உடன் கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது.
இதற்கு எங்கள் தலைவர்கள் பதில் என்ன?
கள்ளு இறக்க அனுமதி தரவில்லை .
அவினாசி அத்திகடவு திட்டம் போன இடம் தெரியவில்லை
”சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும் ”
மு.க வின் சொல்லுக்கெற்ப ஸ்பெக்ட்ரம் வழக்கு நிலுவையில் உள்ளது.
திருப்பூர் சாய கழிவுக்கு ஓரு தீர்வும் காணப்படவில்லை
அதுவரை ..
இனி தேர்தல் வேலை செய்ய போவது இல்லை,
கருத்துரையிடுக