தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை: டாக்டர் எஸ்.ராமதாஸ்

பரமக்குடி:
தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை என பா.ம.க. நிறுவனர் டாக்டர் எஸ்.ராமதாஸ் தெரிவித்தார்.
பரமக்குடியில் ஞாயிற்றுக்கிழமை கட்சிப் பொறுப்பாளர்களின் பாராட்டு விழாவில் பங்கேற்க வந்த அவர் கூறியதாவது:
சமூகநீதிக் கட்சியான பா.ம.க.வில் தென் மாவட்டங்களில் நாடார், முக்குலத்தோர், பிள்ளைமார், யாதவர் ஆகிய சமுதாயத் தினருக்கும் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. என்பது பட்டியல் சாதியினர். இதனை பெயர் மாற்றம் செய்ய வேண்டும். அரசு ஆவணங்களில் தேவேந்திரகுலத்தினர் பல்வேறு பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இதனை மாற்றி தேவேந்திரகுலத்தார் என்ற ஒரே பெயரில் அழைக்க வேண்டும். அருந்ததியருக்கு வழங்கப்படுவது போல் தேவேந்திரர்களுக்கும் உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.
வைகை மற்றும் தாமிரபரணி ஆற்றில் 5 கி.மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும். பூரண மதுவிலக்கு வேண்டும் என 20 ஆண்டுகளாக போராடி வருகிறோம். தற்போது 13 வயது இளைஞர்களும் குடிக்கும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலை நீடித்தால் அடுத்த 5 அல்லது 10 ஆண்டுக்குள் குடிக்காதவர்களே இல்லை என்ற நிலை உருவாகும். இதனால் 34 மாவட்டங்களிலும் மகளிரைத் திரட்டி மது ஒழிப்பு போராட்டம் நடத்தியுள்ளோம். கடந்த 3 ஆண்டுகளில் குறைகளை சுட்டிக்காட்டியதால் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேற்றப்பட்டோம். தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வர வாய்ப்பில்லை. கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக