அணி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - நல்லகண்ணு
நாகர்கோவில்:
தமிழகத்தில் தற்போதுள்ள சூழ்நிலையில் அரசியல் அணி மாற்றத்துக்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் அதிமுகவுடன் உறவு நீடிக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு தெரிவித்தார்.
நாகர்கோவிலில் செவ்வாய்க்கிழமை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணு அளித்த பேட்டி:
காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகளுடன் அரசியல் பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையில் நாங்கள் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து வருகிறோம். அந்த வகையில் தமிழகத்தில் அதிமுகவுடன் உறவு நீடிக்கிறது. இந்த உறவு வரும் தேர்தலிலும் நீடிக்கும். அரசியல் அணி மாற்றத்துக்கு வாய்ப்பில்லாத நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்காக முயற்சி மேற்கொண்டுள்ளோம். சாதிவாரி கணக்கெடுப்பு என்பதை அரசியலாக்கக் கூடாது. கணக்கெடுப்பை யதார்த்தமாக செய்யலாம். தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய ஒதுக்கீடு, சலுகைகளை அளிக்க வேண்டும்.
தமிழகத்தில் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு இலவச மின்மோட்டார்கள் மற்றும் புதிய மின்மோட்டார்களுக்கு மானியம் என்று அரசு அறிவித்துள்ளதை வரவேற்கிறோம். அதேநேரத்தில் இலவசத்தையே கொள்கையாக வைத்திருப்பது நல்லதல்ல. திருநெல்வேலி அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் காளியப்பனை தாக்கிய திமுக எம்.எல்.ஏ. மீது வழக்கு தொடர்ந்து கைது செய்ய வேண்டும். ஐ.ஏ.எஸ். அதிகாரி உமாசங்கர் மீது பழிவாங்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார் நல்லகண்ணு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக