செவ்வாய், 8 மார்ச், 2011

நெய்வேலி சட்டமன்றத் தொகுதியில் மும்முனை போட்டி

நெய்வேலி:

        தொகுதி மறுசீரமைப்புக்குப் பின் கடலூர் மாவட்டத்தில் இருந்த நெல்லிக்குப்பம் தொகுதி நீக்கப்பட்டு, நெய்வேலித் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளது.  

            கடந்த சட்டமன்றத் தேர்தல் வரை குறிஞ்சிப்பாடித் தொகுதியிலிருந்த நெய்வேலி நகரம் தற்போது, பெரும்பாலான பண்ருட்டி ஒன்றிய கிராமங்களை உள்ளடக்கி நெய்வேலி தொகுதியாக உருவெடுத்துள்ளது.  மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர்கள் எண்ணிக்கையைக் கொண்ட தொகுதி நெய்வேலித் தொகுதியாகும். இத்தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 1 லட்சத்து 61 ஆயிரத்து 807.  

               இதில் 83 ஆயிரத்து 277 ஆண் வாக்காளர்களும், 78 ஆயிரத்து 530 பெண் வாக்காளர்களும் உள்ளனர்.  இந்தத் தொகுதியில் உள்ள ஒரு சிறப்பம்சம், நெய்வேலித் தொகுதிக்கு உட்பட்ட நெய்வேலி நகரத்தின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் என்.எல்.சி. நிர்வாகம் மேற்கொண்டு பராமரித்து வருவதால், தேர்வு செய்யப்படும் சட்டமன்ற உறுப்பினர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியை, நெய்வேலி நகருக்கென ஒதுக்கவேண்டிய அவசியமில்லை. 

             மேலும் பெரும்பாலானவர்கள் என்.எல்.சி. ஊழியர்களாக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினரை அதிக அளவில் யாரும் சந்திக்க வரமாட்டார்கள். எனவே சுலபமாக 5 ஆண்டுகளை கடத்திவிடலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் தலைவர்களிடையே நிலவுவதால் நெய்வேலித் தொகுதியை பெறுவதில் திமுக, அதிமுக, தேமுதிக, காங்கிரஸ், பாமக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.  
 
            திமுக சார்பில் தற்போதைய நெல்லிக்குப்பம் எம்.எல்.ஏ.வான சபா.ராஜேந்திரன், அதிமுக சார்பில் சொரத்தூர் ராஜேந்திரன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு அணியைச் சேர்ந்த சி.டி.மெய்யப்பன், சிதம்பரம் அணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், தேமுதிக சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், பாமக சார்பில் வேல்முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சேகர் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை எப்படியாவது பெற்றேத் தீரவேண்டும் என அந்தந்தக் கட்சித் தலைமையிடம் போராடி வருகின்றனர்.  

                 இது தவிர்த்து அந்த்ந்தக் கட்சியைச் சேர்ந்த பல்வேறு பிரமுகர்கள் நெய்வேலித் தொகுதியை பெற்றுவிட முனைப்புக் காட்டுகின்றனர்.  ஒரே கூட்டணியில் உள்ள திமுகவும், பாமகவிற்கும் இடையே நெய்வேலியை பெறுவதில் மிகுந்த போட்டி நிலவும் எனக் கூறப்படுகிறது. ஏனெனில் பாமகவைச் சேர்ந்த வேல்முருகன் கடந்த 2 ஆண்டுகளாகவே நெய்வேலித் தொகுதியில் போட்டியிடுவதற்கு ஏதுவாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்துள்ளார்.  ஆனால் திமுகவினரோ, நெய்வேலியே பாமக தவிர்த்து வேறு யாருக்கு ஒதுக்கினாலும் ஒத்துழைக்கத் தயாராக இருப்பதாக வெளிப்படையாகக் கூறிவருவதால் பாமகவினர் மிரட்சியாகக் காணப்படுகின்றனர்.

0 கருத்துகள்:

About This Blog



இந்த வலைப்பூவில் வெளியிடப்படும் செய்திகள் அனைத்தும் மக்கள் நலன் கருதியே!! எந்த ஒரு தனி மனிதரைப் பற்றியோ, அரசியல் கட்சியை பற்றியோ விமர்சனம் செய்ய அல்ல - கடலூர் மாவட்ட செய்திகள்


  © Blogger templates ProBlogger Template by Ourblogtemplates.com 2008 | The Blog Full of Games

Back to TOP